மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (01) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 06 ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர்.
அந்த வகையில் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய அந்தோனி ஜெரோம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மடு ரோட் சந்தி – பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார் சைக்கிளை தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது வீதி தடையை கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி எறிந்ததில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











