மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிராந்திய மூலோபாயத்தில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்ய ஆலோசித்து வருகிறார்.
ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையே தனது முதன்மை இலக்காக அவர் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாகத் திறந்தால், அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்து, ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் தனது உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டதால், ஈரான் உடனடியாக மீண்டும் அணுஆயுதத் திட்டத்தைத் தொடங்குவது கடினம் என்றும், அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தலே ஈரான் பின்வாங்கியதற்குக் காரணம் என்றும் அவர் நம்புகிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரானால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை விலக்கி, தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்க நிர்வாகம் தயாராக உள்ளது. இருப்பினும், இந்த வழித்தடத்தை முழுமையாகத் திறக்க ஈரான் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்குதல், அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெறுதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்றுதல் மற்றும் கடற்படை முற்றுகையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்திலொரு பங்கு (20%) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், இந்த பாதை மூடப்பட்டது உலகளவில் கடும் விலை ஏற்றத்தையும் பணவீக்கத்தையும் உருவாக்கியுள்ளது.
போர் மேலும் தீவிரமடைந்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால், நிலைமையைச் சீராக்கவும் இருநாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவும் சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பிராந்தியத் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.











