அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வெடித்த போர் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், அது உலகப் பொருளாதாரத்திலும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்விலும் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடக்கத்தில் ராணுவ மோதலாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்த யுத்தம், சர்வதேச அளவில் எரிபொருள் மற்றும் பலசரக்கு பொருட்களின் விலையை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியுள்ளது. வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் அடைத்துள்ளதால், உலகளாவிய சரக்கு போக்குவரத்தும் சர்வதேச வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நீடித்த போரின் காரணமாக அமெரிக்காவின் பென்டகன் அமைப்பில் கடுமையான நிதியிழப்பும் ஆயுதப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த போருக்காக அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் சுமார் 37.5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஆபரேஷன் எபிக் புரி’ போரின் செலவு ஜூன் நிலவரப்படி 38.6 பில்லியன் டொலரை எட்டியுள்ள நிலையில், ஈரானியத் தாக்குதலால் மத்திய கிழக்கில் உள்ள 228-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவக் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களும் 42 போர் விமானங்களும் சேதமடைந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா 200-க்கும் மேற்பட்ட ‘தாட்’ ரகத் தடுப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியதால், பென்டகனின் மொத்த ஆயுதக் கையிருப்பு பாதியாகக் குறைந்துள்ளது. போரின் முதல் இரண்டு நாட்களிலேயே 5.6 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களைப் பயன்படுத்திய அமெரிக்கா, காலியான ஆயுதக் கிடங்குகளை மீண்டும் நிரப்ப 73 பில்லியன் டொலர் கூடுதல் நிதியைப் பெற அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இருப்பினும், முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், புனரமைப்பு மற்றும் கடன் வட்டி என போரின் நீண்டகாலச் செலவு 1 டிரில்லியன் டொலரைத் தாண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ராணுவச் செலவுகளைத் தாண்டி, இந்த மோதலால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கக் குடும்பங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக மட்டும் கூடுதலாக 79.8 பில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளன. இதனால் ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக 609 டொலர் கூடுதல் செலவாகியுள்ள நிலையில், உயர்ந்துள்ள டீசல் விலை காரணமாகச் சரக்கு போக்குவரத்து, மளிகைப் பொருட்களின் விலை மற்றும் விமானக் கட்டணங்கள் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.











