மொன்றியல் நகரில் அமைந்துள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதிலும், பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட வகுப்புவாத வழக்கிற்கு (Class-action lawsuit) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி அன்று இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து, வளாகத்தில் யூத மாணவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பின்மை குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி டொமினிக் பூலின் (Dominique Poulin) வழங்கிய 16 பக்கத் தீர்ப்பில், மெக்கில் பல்கலைக்கழகத்தில் நிலவிய சூழல் “விதிவிலக்கானது மற்றும் சிக்கலானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மெக்கில் பல்கலைக்கழக வளாகத்தில் நிலவும் யூத எதிர்ப்பு (Antisemitism) மற்றும் சியோனிச எதிர்ப்பு (Anti-Zionist) கருத்துக்கள் குறித்த மனுதாரரின் குற்றச்சாட்டுகள், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அளவுக்குப் போதுமான ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மெக்கில் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் டேவிட் கோப்ரின் (David Cobrin) முன்னெடுக்கும் இந்த வழக்கிற்கு, ‘பி’னாய் பிரித் கனடா’ (B’nai Brith Canada) அமைப்பு ஆதரவு வழங்குகிறது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மெக்கில் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து யூத மாணவர்களும் இந்த வழக்கின் கீழ் உள்ளடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களின் போது, யூத மாணவர்கள் யூத எதிர்ப்பு மற்றும் சியோனிச எதிர்ப்பு கருத்துக்களால் இலக்கு வைக்கப்பட்டதாகவும், துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் உள்ள வெறுப்புணர்வு மற்றும் பாகுபாட்டுக் கொள்கைகளைச் சரியாக நடைமுறைப்படுத்த நிர்வாகம் தவறிவிட்டதாக இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மெக்கில் பல்கலைக்கழக நிர்வாகம், ” வளாகங்களில் யூத எதிர்ப்பு நன்கு புரிந்துகொள்ளப்படுவதையும், திறம்படத் தடுக்கப்படுவதையும் உறுதி செய்யப் பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.











