இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்ட நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி செய்த சைகை, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரிய அளவிலான அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வஜ்பாயின் 21 அடி உயரச் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, சோனியா காந்தியின் இந்தச் செயலை 140 கோடி இந்திய மக்களும் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த அவமதிப்பை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
தேசியப் பாடலைப் பாதியில் நிறுத்த முயல்வது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளது. சுதந்திர தின நிகழ்வின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அவருக்கு அமருவதற்கு நாற்காலி கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளவே சோனியா காந்தி கையை உயர்த்திச் சைகை செய்தாரே தவிர, ‘வந்தே மாதரம்’ பாடலை நிறுத்துவதற்காக அல்ல என்று காங்கிரஸ் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தைக் தேவையின்றி பெரிதுபடுத்துவதாகவும் அக்கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.











