தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்துடன் இணைந்து புதிய பான்-இந்தியா திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளார்.
‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, லியோ விஷன் அதிபர் வி.எஸ். ராஜ்குமாருடன் சேர்ந்து நித்யா மேனனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Keyuri Productions Pvt Ltd) இணைந்து தயாரிக்கிறது.
‘காட்டேரி’, ‘யாமிருக்க பயமே’ படங்களின் இயக்குநர் டி.கே. இயக்கும் இத்திரைப்படத்தில் நித்யா மேனனே முதன்மை கதாநாயகியாக நடிக்கிறார்.
பயமுறுத்தும் ஃபேண்டஸி மற்றும் கருப்பு நகைச்சுவை (Fantasy Dark Comedy) பாணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு இயக்குநர் விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார்.
மேலும், ஏ. சக்திவேல் ஒளிப்பதிவையும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.











