இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணை நடத்துவதும், அதற்கு அனுமதி பெறுவதும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பப்பட்ட அனுமதி மனுக்களில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ‘அறப்போர் இயக்கம்’ என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்தபோது நீதிபதி இந்த வேதனையான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசிடம் இருந்து ஜூலை 28-ஆம் தேதி விளக்கக் கடிதம் வரப்பெற்று அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
அதேநேரம், தமிழக அரசு தரப்பில் இது குறித்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி, அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கில் வழக்குத் தொடர அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தால், அதற்குப் பிறகு இந்த வழக்குகள் எவ்வாறு நடக்கும் என்பதை அந்தப் பகவான்தான் தீர்மானிக்க வேண்டும் என ஆதங்கப்பட்டார்.
அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரணைக்குக் கொண்டுவருவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் தாமதங்களையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணொலி வாயிலாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளார்.











