நேபாளம் மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, இமயமலை மண்டலத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான ‘கியிரோங்’ எல்லை வர்த்தக மையம் முற்றிலுமாக சிதைந்து பாழடைந்துள்ளது.
வடக்கு நேபாளத்தின் லாங்டாங் மலைப் பகுதியில் அமைந்திருந்த பனிப்பாறைகள் திடீரென வெடித்துச் சரிந்ததால், லெண்டே கோலா, போடேகோஷி மற்றும் திரிசூலி ஆகிய நதிகளில் கரைபுரண்டு ஓடிய சேறும் சகதியுமான வெள்ளம் எல்லைப் பகுதியின் கட்டமைப்பு முழுவதையும் அடித்துச் சென்றது.
இந்த மாபெரும் இயற்கை பேரிடரால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், நேபாள பொருளாதாரம் சுமார் 10 சதவீதம் வரை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத பேரழிவு, சீன அரசு 2016-ல் முன்மொழிந்த இமயமலைப் பகுதிக்கான பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (BRI) ரயில் திட்டத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தின் சிகாட்சே நகரில் இருந்து கியிரோங் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு வரை சுமார் 72 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ரயில் பாதையின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை, எல்லை மண்டலமே நிலைகுலைந்துள்ள சூழலில் சீனா முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதிதீவிர நிலநடுக்க அபாயமும் இயற்கை உணர்திறனும் கொண்ட இமயமலைப் பகுதியில் சுரங்கங்கள் மற்றும் பாலங்களை அமைத்து ரயில் பாதை உருவாக்குவது எதிர்காலத்தில் மேலும் ஆபத்தான பேரழிவுகளுக்கே வழிவகுக்கும் என சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ள நேபாள அரசு இத்திட்டத்தை முழுமையான மானிய உதவியாகவே சீனா வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், இந்திய எல்லைக்கு மிக அருகில் சீனா தனது உள்கட்டமைப்புகளை விரிவாக்குவது இந்தியாவின் பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் முக்கியக் கவனிப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது.











