பிரச்சனைகள் தீர்க்கப்படாத போதும் கள்வர்களையே மீண்டும் தெரிவுசெய்கிறோம். அத்துடன் தேர்தல் காலங்களில் இங்கு வருபவர்களை பார்த்தால் திருவிழாக் காலங்களில் வருகின்ற கோமாளிகள்,குரங்காட்டிகள் போல இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட வேட்பாளர் சாந்திகுமார் நிரோஸ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
தமிழர்களுக்கு இங்கு பலபிரச்சனைகள் இருக்கிறது.
தேசியபிரச்சனை, 13 வது திருத்தப்பிரச்சனை என பல இருக்கிறது. நானும் இங்கு பிறந்த தமிழன்தான். வன்னியை சேர்ந்தவன் தான். ஆனால் பாராளுமன்றம் சென்ற பிரதிநிதிகள் எமக்கு எதைபெற்றுத்தந்தார்கள். இன்று அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் மக்கள் உள்ளனர்.
எனவே மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக. நாம் இளைஞர்கள் முன்வந்துள்ளோம். இப்படியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டாமல் இருக்கின்ற போதும் அதே கள்வர்களைத்தான் மக்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர். எனவே களவு, ஊழல் கொண்ட பிரதிநிதிகளை இம்முறை நிராகரியுங்கள்.
இந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் பணத்தை அள்ளி வீசுகின்றனர். அது எங்கே இருந்து வருகின்றது என எமக்கு தெரியவில்லை. எனவே மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஒரு தேசிய கட்சியில் தமிழ் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் கட்சியாக நிச்சயம் வரும். எனவே வன்னியில் இளம் தமிழன் ஒருவனை அனுப்புங்கள். தேர்தல் காலங்களில் இங்கு வருபவர்களை பார்த்தால் திருவிழாக் காலங்களில் வருகின்ற கோமாளிகள்,குரங்காட்டிகள் போன்று வித்தைகாட்டுவது போல பலர் வருவார்கள். வீடுகளிற்கு வருபவர்கள் தொடர்பாக உங்கள் மனதுக்குள்ளே சிந்தியுங்கள். என்னத்தை செய்தார்கள் என்று சிந்தியுங்கள். நாங்கள் செய்த பின்னரே மக்களிடம் வருகிறோம். எமது தலைவர் சஜித் பிரேமதாச பலவிடயங்களை செய்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து நாம் பலவற்றை செய்துள்ளோம். எனவே ஆளும் தரப்பாக வந்தால் நாம் அபிவிருத்தியை நிச்சயமாக செய்வோம். எமக்கு 5வருடங்கள் தேவையில்லை 2வருடங்கள் மாத்திரம் எமக்கு போதும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து வீட்டுத்திட்டங்களும் பூரணப்படுத்தப்படும். எனவே ஆளும் கட்சியின் தமிழ்ப் பிரதிநிதியாக உழலற்ற ஒருவரை அனுப்புங்கள். அதன் மூலமே அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கமுடியும் என்றார்.











