மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர்பாடசாலை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்று அங்கு வாக்களிக்க உதவி கேட்டு சின்னம் ஒன்றுக்கு புள்ளடியிட்டு தருமாறு கோரிய வயோதிப பெண் தெரிவித்த சின்னத்துக்கு பதிலாக வேறு சின்னத்துக்கு புள்ளடியிட்டுக் கொடுத்த அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தரை உடனடியாக கடமையில் இருந்து விலக்கிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக தேர்தல் உதவி ஆணையாளர் எம்.பி.எம். சுபயான் தெரிவித்தார்.
இதுபற்றி தெரியவருவதாவது,
குறித்த வாக்குச்சாவடியில் சம்பவதினமான இன்று வாக்களிப்பதற்காக வயோதிப பெண் ஒருவர் சென்று வாக்களிப்பதற்கு உதவிகோரியதையடுத்து அங்கு கடமையாற்றிவரும் உத்தியோகத்தர் ஒருவரை அவருக்கு உதவுமாறு வாக்குசாவடிக்கு பொறுப்பான தேர்தல் பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பெண் ஒரு சின்னத்தை தெரிவித்து அதற்கு புள்ளடியிடுமாறு அவரிடம் தெரிவித்தார். அதனையடுத்து குறித்த உத்தியோகத்தர் வேறு ஒரு சின்னத்துக்கு புள்ளடியிட்டு வாக்குசீட்டை மடித்து குறித்த பெண்ணிடம் வழங்கியதையடுத்து அவர் அந்த வாக்கு சீட்டை விரித்து பார்த்து தான் தெரிவித்த சின்னத்துக்கு புள்ளடியிட்டுள்ளார். என பார்த்தபோது வேறு ஒரு சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் சென்று உடனடியாக குறித்த உத்தியோகத்தரை கடமையில் இருந்து நீக்கி அவரை தேர்தல் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றதுடன் குறித்த பெண் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்து வாக்களிக்க வைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.











