கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட வந்திருந்த 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் அருகில் உள்ள கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹட்டன், டிக்கோயா பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த மாணவன் 10 வயதான தனது சகோதரன் மற்றும் தமது மாமாவுடன் கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவதற்காக நேற்று(16) மாலை சென்றுள்ளார். அவர்கள் கொழும்பு துறைமுக நகரத்தினுள் நீராடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கடலுக்குள் இறங்கிய போது 15 வயதான குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதனை அடுத்து மாணவனின் மாமா காவல்துறை மற்றும் கடற்படை ஆகியோருக்கு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்போது, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவன் தனது கல்வி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.