தற்போது மரவள்ளிக்கிழங்கு சீசன் என்பதால் மார்கெட்டில் விலைக் குறைவில் இந்த கிழங்கு கிடைக்கும். மரவள்ளிக்கிழங்கு மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடமாட்டார்களா?
அவர்களை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் மாலை வேளையில் இந்த கிழங்கைக் கொண்டு வித்தியாசமான சுவையில் புட்டு செய்யுங்கள். இந்த வித்தியாசமான புட்டு பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் பசியைப் போக்குவதோடு, சத்தையும் வழங்கும். உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ
* ரவை – 14 கப்
* தேங்காய் – 1 கப்
* உப்பு – 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை – 1/2 கப்
* அரிசி மாவு – 1/4 கப்
* நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் – சிறிது
செய்முறை: * முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் துருவிய மரவள்ளிக்கிழங்கை எடுத்து, அத்துடன் ரவை, துருவிய தேங்காய், உப்பு, ஏலக்காய் தூள், சர்க்கரை மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதையும் தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழிக்கரண்டியில் நிரப்பி, இட்லி தட்டின் குழியினுள் வைத்து, இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டை வைத்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த பின் அதை எடுத்தால், சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு தயார்.