ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை மத்திய அரசு அமைக்கவுள்ளது. அத்துடன் வடமேற்குப் பகுதியில் 800 கி.மீ பிரம்மாண்ட நெடுஞ்சாலை ஒன்றையும் ஒன்ராறியோவில் உலகின் அதிநவீனப் பாதுகாப்பான அணுக்கழிவு சேமிப்பு மையம் ஒன்றையும் அமைக்கவுள்ளது.
இந்த மூன்று திட்டங்களை ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த’ (Projects of National Interest) திட்டங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு, மத்திய அரசு உத்தியோகபூர்வமாகத் தனது முதலாவது செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார உட்கட்டமைப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலேயே, இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டின் வடமேற்குப் பகுதிகளின் தலைநகரான யெலோநைஃபில் (Yellowknife) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், போக்குவரத்து
அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon), எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் டிம் ஹாட்சன் (Tim Hodgson) மற்றும் பூர்வகுடி உறவுகள் துறை அமைச்சர் ரெபெக்கா ஆல்டி (Rebecca Alty) ஆகிய மூவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் இத்திட்டங்களை தேசியப் பட்டியலில் இணைப்பதன் மூலம், பல்வேறு மட்டங்களில் இழுபறியாக நீடிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சட்டபூர்வ அனுமதிகளை, “Single Window” எனப்படும் ஒரே சாளர முறையில் அதிவேகமாக (Fast-track) நிறைவேற்ற வழிவகை பிறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் மூலம் கனிம வளம் மேம்படுவதோடு நாட்டின் எல்லைப் பாதுகாப்பும் பலப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.











