காசா நகரின் துஃபா (Tuffah district) பகுதியில் அமைந்துள்ள போர் நினைவிடத்தின் ஒரு பகுதியான கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நாட்டின் பிரதான ஊடகமொன்றின் காட்சிப் புலனாய்வுக் குழு (Visual Investigations Team) உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் அங்கு சக்திவாய்ந்த வெடிபொருட்களைப் பயன்படுத்தி நிலத்தடி வெடிப்புகளை நிகழ்த்தியதோடு, புல்டோசர்கள் மற்றும் டாங்குகளைக் கொண்டு கல்லறைகளையும் அதன் வளைவு நுழைவாயிலையும் முற்றாகத் தகர்த்துள்ளது.
காசாவிற்குள் சர்வதேச ஊடகவியலாளர்கள் நேரடியாகச் செல்ல இஸ்ரேல் ராணுவம் தடை விதித்துள்ளதால், பிளானட் லேப்ஸ் (Planet Labs) மற்றும் பெலிம்காட் (Bellingcat) ஆகிய அமைப்புகளின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து இந்த அழிவுச்செயற்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சுரங்கப்பாதையை அழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், புதைக்கப்பட்ட கனேடிய வீரர்களின் உடல்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பது அவர்களின் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இங்கு புதைக்கப்பட்டுள்ள 22 கனேடிய வீரர்களும் 1956 ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்து மீது படையெடுத்ததைத் (Suez Crisis) தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை அமைத்த உலகின் முதல் பெரும் அமைதிப்படையின் போது உயிரிழந்தவர்களாவர்.
வெளிநாடுகளில் புதைக்கப்பட்டுள்ள கனேடிய வீரர்களின் கடைசிப் தொகுதி இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதி முதலே, இந்த நினைவிடத்தைச் சுற்றி இஸ்ரேல் டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட ஒரு வீடியோவில், கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு மூலைப்பகுதியில் தொடர்ச்சியான நிலத்தடி குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, பெரும் பள்ளம் (Crater) உருவானது கண்டறியப்பட்டது. எஞ்சியிருந்த கனேடியப் பிரிவின் பிரதான வளைவு நுழைவாயில் (Arched Entrance) கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளமை தற்போதைய புதிய செயற்கைக்கோள் படங்களில் உறுதியாகியுள்ளது.
இது குறித்து, அந்த ஊடகமானது, இஸ்ரேல் பாதுகாப்புப் படையைத் (IDF) தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, அதன் 401-வது பிரிகேட் காம்பாட் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் இந்த அழிவை ஒப்புக்கொண்டார்.
கல்லறைத் தோட்டத்தின் கீழே சுமார் 20 முதல் 30 மீட்டர் ஆழத்தில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிலத்தடி சுரங்கப்பாதை (Hamas Tunnel) ஒன்று அமைக்கப்பட்டிருந்தது என்றும் கடுமையான போர்க்களச் சூழலில், அந்தப் பாதையை முற்றாகத் தகர்க்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருந்தமையால் கனரக இயந்திரங்களைக் கொண்டு அங்கு தோண்டியதாகவும் இஸ்ரேலிய இராணுவத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.











