சர்வதேச அளவில் எழுந்துள்ள சவால்களையும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள கனேடியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறைகூவல் விடுத்துள்ளார்.
159ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஒட்டாவாவின் லெபிரெட்டன் பிளாட்ஸ் பூங்காவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ மதிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் மார்க் கார்னி இந்த அறைகூவலை வெளியிட்டார்,
ஆபத்துகளும் பிரிவினைகளும் மலிந்துவிட்ட தற்போதைய உலகச் சூழலில், கனேடிய மக்கள் காட்டி வரும் அசாத்திய துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், “உலகை எதிர்கொள்ள நமக்குத் துணிச்சல் தேவை என்றால், சாத்தியமற்ற காரியங்களையும் சாதித்துக் காட்ட நமக்கு ‘ஒற்றுமை கலந்த பிணைப்பு’ (Connection) அவசியமாகிறது,” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக முறுகல்கள் மற்றும் அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் பிரிவினைவாத வாக்கெடுப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரதமரின் இந்த உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி அல்பெர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாகச் செயல்படலாமா என்பது குறித்த ஆரம்பக்கட்ட பொதுஜன வாக்கெடுப்பை (Referendum) நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமைக்கான அறைகூவலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











