மொன்றியலின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பழைய துறைமுகப் (Old Port) பகுதியில், கப்பல்துறை மேடையிலிருந்து (Pier) நபரொருவர் திடீரென சென்ட் லாரன்ஸ் ஆற்றில் (St. Lawrence River) விழுந்ததை அடுத்து, அவரை மீட்பதற்கான பாரிய அவசரக் கூட்டு நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.
ஆற்றில் விழுந்தவரைத் தேடி மீட்பதற்காக மொன்றியல் தீயணைப்புத் துறை (SIM) மற்றும் கனேடிய கடலோரக் காவல்படை (Canadian Coast Guard) ஆகியவற்றைச் சேர்ந்த விசேட பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆற்று நீரின் வேகம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணியில் சவால்கள் நிலவின. இருப்பினும், தீயணைப்புத் துறையின் விசேட படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நபர் சில நிமிட தேடுதலின் பின் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டு நீருக்குள் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார்.
ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட நபர் உடனடியாக அங்கிருந்த ‘அர்ஜென்ஸ்- சந்தே’ (Urgences-santé) எனும் அவசர மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடுமையான குளிர் நிலவும் ஆற்று நீரில் இருந்ததால், அவருக்கு முதலுதவிச்சிகிச்சைகள் அந்த இடத்தில் வைத்தே வழங்கப்பட்டன. பின்னர், மீட்கப்பட்ட நபர் மேலதிக அவசர மருத்துவக் கண்காணிப்பிற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்செயலாக ஆற்றுக்குள் விழுந்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து மொன்றியல் பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டத் தகவல்களின்படி, இதில் எவ்வித குற்றச்செயல் பின்னணியும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.











