கனடாவின் நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மாகாணத்தில், ஹாலிஃபாக்ஸின் வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூஸ்லாண்ட் ரோடு (Mooseland Road) பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் இந்த தீ சுமார் 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான வரைபட மதிப்பீட்டின் அடிப்படையில், தீயின் தற்போதைய பரப்பளவு சுமார் 14 சதுர கிலோமீட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் கணக்கில் இருந்து நீக்கப்பட்டதால் இந்த திருத்தம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார் மாகாணத்திலிருந்து இரண்டு நீர் குண்டுவீச்சு விமானங்கள் (Water Bombers) அனுப்பப்பட்டுள்ளன. அதோடு, நோவா ஸ்கோஷியாவின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் நான்கு நீர் குண்டுவீச்சு விமானங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை, ஹாலிஃபாக்ஸ் பிராந்திய தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை, மூஸ்லாண்ட் ரோடு பகுதியில் கட்டாய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவால் சுமார் 100 முதல் 150 பேர் வரை தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீ புதன்கிழமை முதல் எரிந்து வருவதாகவும், உள்ளூர் மற்றும் மாகாண மீட்புக் குழுக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாண இயற்கை வளத் துறை, தீ நிலைமை தொடர்பாக மேலும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பின்னர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கனடா முழுவதும் 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் எரிந்து வருவதாக தேசிய வனத்தீ கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் 122 தீகள் இன்னும் கட்டுப்பாட்டை மீறிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.











