கனடா மற்றும் அமெரிக்க எல்லையுடைய கியூபெக் பிராந்தியப் பகுதியில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, தொற்றாகப் பரவக்கூடிய ஒரு அபூர்வ வகை தோல் புற்றுநோய் (Transmissible Skin Cancer) பரவி வருவதை அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழக (University of Vermont) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்திற்கும் அமெரிக்காவின் வெர்மாண்ட் மாநிலத்திற்கும் இடையில் அமைந்துள்ள ‘மெம்ஃப்ரெமேகாக்’ (Lake Memphremagog)
ஏரியில் வாழும் ‘பிரவுன் புல்ஹெட்’ (Brown Bullhead Catfish) ரகக் கெளுத்தி மீன்களில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கறுப்பு நிறத் தோல் தழும்புகள் காணப்படுவதை மீனவர்களும் உயிரியலாளர்களும் அவதானித்து வந்தனர்.
இத் தழும்புகள் தீவிரமான ‘மெலனோமா’ (Melanoma) எனப்படும் தோல் புற்றுநோய் கட்டிகள் என்பதை உறுதிசெய்த ஆய்வாளர்கள், ஏரியின் அடிவாரத்தில் சூரிய ஒளி படாத ஆழமான பகுதிகளில் வாழும் மீன்களுக்கு எவ்வாறு தோல் புற்றுநோய் ஏற்பட்டது என்பது குறித்து மரபணுச்
சோதனைகளை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மீன்களின் கட்டிகளில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ (DNA) மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் புற்றுநோய் செல்கள்
பாதிக்கப்பட்ட மீனின் சொந்த உடலமைப்பை விட, ஏரியில் உள்ள ஏனைய பாதிக்கப்பட்ட மீன்களின் புற்றுநோய் மரபணுக்களுடன் பெருமளவில் ஒத்துப்போவதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதிலிருந்து, மீனின் சொந்தச் செல்கள் புற்றுநோயாக மாறாமல், வெளிப்புறத்திலிருந்து தொற்றிய புற்றுநோய் செல்களே உடலுக்குள் வளர்ந்து நோயைப் பரப்புகின்றன என்பது உறுதியானது.
மெம்ஃப்ரெமேகாக் ஏரி நீர் 1,75,000 க்கும் மேற்பட்ட மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கினாலும், இந்த மீன் புற்றுநோயால் மனிதர்களுக்கு
எவ்வித ஆபத்தும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.











