தகுதியுடைய அனைத்து வயதுவந்த பிரஜைகளும் இனி தங்களது கடவுச்சீட்டுகளை (Passport) இணையவழியில் புதுப்பித்துக்கொள்ள முடியும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரை நடைமுறையிலிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் நீக்கப்பட்டு, இச்சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் லேனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) வான்கூவர் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இப் புதிய நடைமுறையை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இப்புதிய திட்டத்தின் மூலம், கனடியப் பிரஜைகள் சேவை மையங்களுக்கு நேரடியாகச் செல்லாமலோ அல்லது ஆவணங்களை அஞ்சல் மூலம் அனுப்பாமலோ, தங்களது வீடுகளிலிருந்தவாறே இணையம் வழியாகக் கடவுச்சீட்டைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது புதுப்பித்தல் விண்ணப்பம், அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட டிஜிட்டல்
புகைப்படம் மற்றும் கட்டணங்களை இணையத்தள போர்ட்டல் (IRCC Portal) மூலம் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன் தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையையும் உடனுக்குடன் (Real-time tracking) இணையவழியில் அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இணையவழியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 20 வணிக நாட்களுக்குள் (Business days) பரிசீலிக்கப்பட்டு, புதிய கடவுச்சீட்டு
விண்ணப்பதாரரின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து 30 வணிக நாட்களுக்குள் கடவுச்சீட்டு கிடைக்கப் பெறாவிடின், விண்ணப்பக் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படுவதுடன், கடவுச்சீட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற சேவை உத்தரவாதத்தையும் (Service guarantee) மத்திய அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்குள் முடியும் தருவாயில் உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே காலாவதியானவர்கள் மட்டுமே இணையவழியில் விண்ணப்பிக்க முடிந்தது.
மேலும், நாளொன்றுக்கு 2,000 விண்ணப்பங்கள் என்ற வரம்பும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பின் மூலம் இந்த வரம்புகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.











