அல்பர்ட்டா மாகாண அரசு முன்மொழிந்துள்ள புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டம், பசிபிக் பெருங்கடலில் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ‘தெற்குப் பகுதி கொலையாளித் திமிங்கலங்களின்’ வாழ்வியலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் எனச் சூழலியல் அமைப்புகளும் கடல்வாழ் உயிரியல் நிபுணர்களும் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
உலகில் வெறும் 74 முதல் 75 திமிங்கலங்களே எஞ்சியுள்ள நிலையில், இத்திட்டத்தினால் ஏற்படும் எண்ணெய் கசிவு ஆபத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பு என்பன இந்த அரிய கடல்வாழ் உயிரினங்களை முழுமையாக அழித்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா அரசினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், நாளொன்றுக்குச் சுமார் 10 இலட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் 1,250 கிலோமீற்றர் தூரத்திற்கு டிரான்ஸ் மவுண்டன் குழாய் வழியை ஒத்த பாதையில் கொண்டுசெல்லப்படவுள்ளது. இதற்காகப் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்குப் பகுதிக்கு எண்ணெய் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து சாலிஷ் கடல் வழியாக ஏற்றுமதி முனையங்களுக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பப்படவுள்ளது.
இத்திட்டம் குறித்து சர்வதேசச் சூழலியல் அமைப்பான ஸ்டாண்ட்.எர்த் நிறுவனத்தின் பிரதிநிதி அன்னா பார்போர்ட் கருத்துத் தெரிவிக்கையில்,இப்பகுதியில் ஒரேயொரு எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கூட, அது தலைமுறை தலைமுறையாகக் கடல்வாழ் உயிரினங்கள் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்குப் பகுதி கொலையாளித் திமிங்கலங்கள் மத்திய அரசின் ஆபத்திற்குள்ளான உயிரினங்கள் சட்டத்தின் (Species At Risk Act) கீழ் பாதுகாக்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட திட்டங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து, கூட்டாட்சி அரசு பரிசீலித்து வருவதாகவும் சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.










