டொமினிக்காவில் (Dominica) வசித்து வந்தவரும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவருமான பிரபல தொழிலதிபரும், அவரது வாழ்க்கைத்துணையும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இரண்டு அமெரிக்க பிரஜைகளும் குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டொமினிக்காவின் தலைநகர் ரோசோவில் (Roseau) உள்ள மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், நடுவர் மன்றம் (Jury) இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திலேயே கலந்தாலோசித்து, பிரதிவாதிகள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜொனாதன் லெஹ்ரர் (Jonathan Lehrer) மற்றும் ராபர்ட் சினைடர் ஜூனியர் (Robert Snyder Jr.) ஆகிய இருவருமே இக்கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களாவர்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கான முப்பரிமாண (3D) அனிமேஷன் மென்பொருளை உருவாக்கிப் புகழ்பெற்ற கனடிய தொழிலதிபர் டேனியல் லேங்லோயிஸ் மற்றும் அவரது நீண்டகாலப் பங்காளியான தொமினிக் மார்சண்ட் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டொமினிக்காவின் தெற்குப் பகுதியிலுள்ள ‘கல்லியன்’ (Gallion) பகுதிக்கு அருகே, எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார் ஒன்றிலிருந்து இவ்விருவரின் உடல்களும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











