டொரொண்டோவில் உள்ள ‘பில்லி பிஷப்’ (Billy Bishop) நகர மைய விமான நிலையத்தில் வணிகரீதியான ஜெட் விமானங்களின் போக்குவரத்தை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு முன்னெடுத்து வரும் பிரம்மாண்ட ‘அல்டோ’ (Alto) அதிவேக ரயில் திட்டத்திற்கான தனது ஆதரவை ஒன்ராறியோ மாகாண அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொரொண்டோ தீவில் அமைந்துள்ள பில்லி பிஷப் விமான நிலையத்தில் ஜெட் விமானங்களை அனுமதிக்கும் ஒன்ராறியோ மாகாண அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்காது என, மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
விமான நிலையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு ஒன்ராறியோ மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்காரியா (Prabmeet Sarkaria) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறு குழுக்களின் (Fringe Groups) எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் திறன் மத்திய அரசிற்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையான மாகாண அரசாங்கத்திற்கும், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கும் இடையே நிலவி வந்த இருதரப்பு உறவில், இத்தீர்மானம் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.











