யாழ்ப்பாண பழைய கச்சேரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை பழைய சுவடுகள் அழியாத வகையில் அவற்றைப் பாதுகாப்பதுடன், தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் கலாசார மையமாக அதனை மாற்ற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக , பழைய பூங்கா பகுதிக்குள் அமைத்துள்ள “பழைய கச்சேரி” கட்டத்தை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது பாரம்பரியக் கலைகளான கூத்து, பரதநாட்டியம் மற்றும் நாட்டார் கலைகள் போன்றவற்றை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கான நிரந்தர செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதற்கு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக இந்த இடத்தினை பயன்படுத்திக்கொண்டால், உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு வருகை தந்து எமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான சுற்றுலா மற்றும் கலாசார மையமாக இதனை உருவாக்க முடியும்.
இதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், கலைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.











