ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமடைந்துள்ள மோதலுக்கு மத்தியில், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் மிகப்பாரிய பாதுகாப்பான நாவாய் போக்குவரத்து செயல்பாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்க கடற்படை, வான்படை மற்றும் விண்வெளி செயற்கைக்கோள் தரவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற 40 வணிகக் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாகக் கடக்க உதவியுள்ளன.
போர் சூழல் தொடங்கியதற்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை அதிகமான எண்ணெய் கப்பல்கள் இந்த வழியைக் கடப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் வான்வழியிலேயே தடுத்து அழித்தன.
அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள ஈரானின் வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் கடல்சார் கண்ணிவெடி வீச்சாளர்கள் உள்ளிட்ட சுமார் 60 ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா ஒரே நாளில் தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மறுபுறம், ஈரானின் துறைமுகங்கள் வழியே எண்ணெய் ஏற்றுமதி அல்லது இறக்குமதி நடப்பதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் கடல்சார் முற்றுகையையும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்வினையாக, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
போர் தொடங்குவதற்கு முன்பு வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தினமும் சராசரியாக 20 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், தற்போதைய பதற்றமான சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் பிராந்தியத்தில் அமெரிக்கா பலமான கட்டுப்பாட்டை எட்டியுள்ளதாகவும், வரும் நாட்களில் ஈரானிய ராணுவ தளங்கள் மீதான தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.











