தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க 52 முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்களின் அமைதியான தரிசனத்தையும், ஆன்மிகச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முக்கியத் தளர்வுகளையும் புதிய விளக்கங்களையும் அளித்துள்ளார்.
அதன்படி, கோவில்களுக்கு வருகை தரும் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்தத் தடையிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து செல்போன்களைப் பெற்றுப் பாதுகாப்புக் வைப்பகங்களில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏதுவாகப் பொதுமக்கள் அனைவரிடமும் செல்போன்களைப் கட்டாயமாகப் பெற்று வைப்பதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கேமரா வசதி இல்லாத சாதாரண ரக மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கும் எந்தவிதமான தடையுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் வைப்பகங்களில் வசூலிக்கப்படும் ரூ. 5 கட்டணமானது அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதற்காக அல்ல என்றும், அங்குப் பணியாற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான ஊதியம் மற்றும் டோக்கன் அச்சுச் செலவினங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதில் ஏதேனும் கூடுதல் தொகை மிஞ்சினால், அது ஏழைப் பக்தர்களின் அன்னதானத் திட்டத்திற்கே பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், வரலாற்றுத் சிறப்புமிக்க சிற்பங்கள் மற்றும் தமிழ் கல்வெட்டுகளின் அமைதியை பக்தர்கள் ரசித்துத் தரிசனம் செய்யவே நீதிமன்ற உத்தரவின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.











