மத்திய ஆப்பிரிக்க நாடான ஜனநாயக காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் தொற்று, அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சுகாதாரப் பேரிடராக மாறியுள்ளது.
காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தரவுகளின்படி, இதுவரை 6,186 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது.
மே மாத மத்தியில் இந்தத் தொற்று உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, நோய் பரவும் வேகம் தீவிரமடைந்து தற்போது ஆறு மாகாணங்களில் உள்ள 60 சுகாதார மண்டலங்களுக்கு பரவியுள்ளது.
முக்கியமாக Bundibugyo என்ற அபூர்வ வகை எபோலா வைரஸால் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதால், இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்த குறிப்பிட்ட வைரஸ் வகைக்கென இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ நடைமுறையில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘எர்வெபோ’ (Ervebo) தடுப்பூசி முதற்கட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தொற்று பரவலைத் தடுப்பதில் நிலவும் முக்கியச் சவால்களாக, நாட்டின் கிழக்குப்பகுதியில் நீடிக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் மோதல்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் போதிய மருத்துவக் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் மருத்துவமனைகளுக்கு வெளியே சமூக அளவில் நடப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
மேலும், புதிய கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மத்தியில் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 60 சதவீதமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை, தடுப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை என்றும், தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டை இழந்து பரவி வருவதாகவும் எச்சரித்துள்ளன.
சர்வதேச நாடுகள் உடனடி நிதியுதவிகளையும் மருத்துவ ஆதரவுகளையும் அளித்து வருகின்றன.











