சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டம் தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டம் மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை பயன்பாடு மற்றும் நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெருமளவில் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள் முன்மொழியப்பட்ட பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ளன.
இங்கு மிகப்பெரிய நிர்வாக வளாகம் அமைக்கப்படுவதால் 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவர்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதாரத் தொழில்கள் முடங்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், அதிஉயர் பாதுகாப்பு கொண்ட தலைமைச் செயலகம் அமைவதன் மூலம், பொதுமக்களுக்குச் சொந்தமான கடற்கரைப் பகுதி கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.
புயல், கடல் மட்ட உயர்வு மற்றும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் சூழலியல் பகுதியாக இது உள்ளதால், காலநிலை அவசரநிலை நிலவும் சூழலில் இங்கு தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவை என்றபோதிலும், கடலோரப் பகுதியை ஆக்கிரமித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், அரசு பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று இடங்களைப் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.











