சாவகச்சேரி நகர சபையின் உப தாவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நகர சபை விசேட கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து , அதனை தூக்கி வீசினார் எனும் குற்றச்சாட்டில் நகர சபையின் உபதவிசாளர், வடமாகாண ஆளூநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உபதவிசாளர் பதவி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவி ஆகியவை வறிதாக்கப்பட்டது.
அந்நிலையில் ஆளூனரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,அதனை மீள பெற கோரியும் சாவகச்சேரி நகர சபையில் தீர்மானம் நிறைவேற்ற விசேட சபை அமர்வினை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடத்த நகர பிதா அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த விசேட அமர்வுக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் சமூகம் அளிக்காத காரணத்தால் , சபையில் கோரமின்றி சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
சாவகச்சேரி நகர சபையின் 18 உறுப்பினர்களில் குறித்த விசேட அமர்வுக்கு தமிழரசு கட்சியின் ஆறு உறுப்பினர்கள் , தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினருமாக 10 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. ஏனைய 08 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ சேர்ந்த 06 உறுப்பினர்கள் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 02 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.











