ஆர்க்டிக் மற்றும் வடக்குப் பிராந்தியங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 4,000 கோடி டொலருக்கும் அதிகமான நிதியின் பலன்கள், அங்கு வாழும் ‘இனுவிட்’ (Inuit) பூர்வகுடி மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அதிகாரப்பூர்வமாக இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். கியூபெக்கின் வடக்கு பகுதியில் உள்ள நுனாவிக் (Nunavik) பிராந்தியத்தின் மிகப்பெரிய கிராமமான ‘குஜ்ஜுவாக்’ கிற்கு, கடந்த 20 ஆண்டுகளில் சென்ற முதல் தற்போதைய பிரதமர் என்ற பெருமையுடன் மார்க் கார்னி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இனுவிட் – மத்திய அரசு கூட்டாண்மைக் குழு’ கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
இந்த ஆர்க்டிக் பாதுகாப்பு முதலீடுகள் மூலம் உருவாக்கப்படும் புதிய விமான ஓடுதளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளால் உள்ளூர் பூர்வகுடி சமூகங்கள் பயனடைவர் என்று மார்க் கார்னி தெரிவித்தார்.
கடந்த கால வரலாற்றுத் தவறுகள் மற்றும் பூர்வகுடி மக்கள் மீதான ஆதிக்கக் கொள்கைகள் இனி ஒருபோதும் மீண்டும் நிகழாது என்றும் இனுவிட் தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் கார்னி உறுதியளித்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள ‘Inuit Child First Initiative’ திட்டத்திற்கு மாற்றாக, உள்ளூர் சமூகங்களுக்குள்ளேயே குழந்தைகள் தங்கி மருத்துவ மற்றும் சமூக உதவிகளைப் பெறும் வகையிலான புதிய மேம்பட்ட திட்டத்தின் சட்டக் கட்டமைப்பை (Framework) இறுதி செய்வதற்கு, மத்திய அரசாங்கமும் பூர்வகுடியினர் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











