வடக்கு மாகாணத்தில் இந்த சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்றாம் போகச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், நிதி மற்றும் பௌதிக முன்னேற்றங்கள் என்பன விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வடக்கு மாகாணத்தில் 37,961 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 38,405 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இலக்கு விஞ்சப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 156,326 மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நெல் உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் நாற்று மாற்று நெற்செய்கை முறை, பராசூட் நாற்று நடவு முறை உள்ளிட்ட நவீன பயிரிடல் முறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், யாயா அடிப்படையிலான நெற்செய்கைத் திட்டங்களும் பல மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டங்களின் ஊடாக சில பகுதிகளில் ஒரு ஹெக்டேயருக்கு ஆறு மெட்ரிக் தொனுக்கும் அதிகமான விளைச்சல் பதிவாகியுள்ளமை, நவீன விவசாயத் தொழில்நுட்பங்களின் பயன்திறனை வெளிப்படுத்துவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.











