தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறித்த மாநாடானது நேற்றைய தினம் (17) பண்டாரவணியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையிலும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம. வினோத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
இந் நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயல்முறையில், பாடசாலை மட்டத்தில் சிறுவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் தூதுவர் மாநாட்டை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வுகளை முன்வைக்கும் மாவட்ட மாணவத்தூதுவர் முன்மொழிவுகள் மாநாடு இன்றைய தினம் நடைபெற்றுந்தது.
மாணவத் தலைவர்கள் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் செயற்பாட்டுடன் ஈடுபடும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாடசாலை மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிரச்னைகள் மற்றும் அவற்றிற்கான நடைமுறத்தீர்வுகளை ஆராயும் நோக்கில் இம் மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு நடிபெற்றிருந்தது.
இதன் மூலம் பாடசாலைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, சிறுவர் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மேலும் பாடசாலை அடிப்படையிலான சிறந்த சிறுவர் பாதுகாப்பு நடைமுறைகளை சமூகத்தில் வெளியிடப்படுவதும் இம் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
குறித்த தேசிய வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்ட பாடசாலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாணவத் தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர், துணுக்காய் வலய உதவிக்கல்வி பணிப்பாளர், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர், சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர், போதைப்பொருள் ஒழிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











