ஹட்டன் – டிக்கோயா நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை ரொத்தஸ் பகுதியில் கொண்டு சென்று மீள்சுழற்சி செய்து, கொம்போஸ்ட் மற்றும் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செனன், ரொத்தஸ், எபோட்சிலி மற்றும் ஸ்ரதன் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ரொத்தஸ் பகுதியில் குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு வந்து மீள்சுழற்சி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்களது பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குப்பை மற்றும் கழிவுகளை தமது குடியிருப்புப் பகுதிக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள், குறித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், மக்களின் எதிர்ப்பையும் அவர்களது கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, குப்பை முகாமைத்துவ திட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.











