மட்டக்களப்பு திருப்பெரும்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொண்டு சென்று கொட்டப்பட்ட குப்பை மேட்டில், இன்று ஞாயிற்றுக்கிழமை (07) ஏற்பட்ட பாரிய தீயையடுத்து அந்த பகுதியிலுள்ள சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளமாக உள்ள தென்னம் தோப்பு காணியில் குப்பைகளை கொட்டி நிரப்புவதற்காக மாநரசபைக்கு காணி உரிமையாளர்கள் இருவர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து 3 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியில் தினமும் பாரியளவிலான குப்பைகளை உழவு இந்திரம் மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு சென்று கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் சம்பவதினமான இன்று மாலை 4 மணிக்கு குப்பைமேட்டில் தீ பற்றி எரிய ஆரம்பித்ததையடுத்து அந்தபகுதியிலுள்ள தென்னை மரங்கள் மற்றும் மரங்களில் தீப்பற்றியதுடன் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவி எரியதொடங்கியதையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்தும் குப்பைகள் எரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.