நேற்றைய தினம் சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடரானது ஆரம்பமானது. இப்போட்டி அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை நடத்தப்படுவதுடன் மொத்தம் 14 சுற்றுகளை கொண்டது.
போட்டியில் வெற்றிக்கு ஒரு புள்ளியும், சமநிலைக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் உலக சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 14 சுற்று முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தால், வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் கடைப்பிடிக்கப்படும்.
கிளாசிக்கல் முறையில் நடக்கும் இந்த போட்டியில் முதல் 40 நகர்த்தலுக்கு 120 நிமிடங்களும், எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். இது தவிர 40-வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி கூடுதலாக வழங்கப்படும். 40-வது நகர்த்தலுக்கு முன்பாக சமநிலையில் முடிக்க அனுமதிக்கப்படாது.











