மன்னார் மாவட்ட கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (12) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பட்டில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரவிகரன் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை,இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையினால் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் மீனவர்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அனுமதியை மீண்டும் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
மீன்பிடி நடவடிக்கைகளின் போது சில தொழில்களுக்கான வழங்கப்படுகின்ற பாஸ் நடைமுறை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த தொழில்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள கண்டல் தாவரங்களை வெட்டி கடற்றொழில் நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில் கடலரிப்பு ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் எனவே குறித்த கண்டல் தாவரங்களை வெட்டுகின்ற மீனவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என கலந்து கொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.











