கியூபெக் மாகாணத்தின் லாங்குயில் பிராந்தியத்தைச் சேர்ந்த 35 வயதான ஆண்ட்ரேஸ் பெலிப்பெ முனோஸ் (Andres Felipe Munoz) என்ற நபர், தனது முன்னாள் பெண் துணையைத் தாக்கியமை மற்றும் துன்புறுத்தியமை உள்ளிட்ட குடும்ப வன்முறை வழக்குகளுக்காகக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேடப்பட்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இரவு சுமார் 8:41 மணியளவில், கியூபெக்கின் வோத்ரூயில் (Vaudreuil) பகுதியில் வைத்து, முனோஸ் தனது காலில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கண்காணிப்பு வளையத்தை உடைத்து அறுத்தெறிந்துள்ளார். வளையத்தை அறுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே கியூபெக் மாகாண எல்லையைக் கடந்து அவர் அண்டை மாகாணமான ஒன்டாரியோவிற்குள் தப்பியோடியுள்ளார்.
கண்காணிப்பு வளையம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 7ஆம் தேதி இந்த வழக்கு குடும்ப வன்முறை தடுப்புக்கான விசேட போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் திகதி அதிகாலை 6:00 மணியளவில், ஒன்டாரியோவின் யார்க் பிராந்திய காவல்துறை (York Regional Police) மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு விசேட புலனாய்வுக் குழுவினர் இணைந்து நடத்திய அதிரடி கூட்டு நடவடிக்கையில் முனோஸ் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் தனது முகத் தோற்றம் மற்றும் அடையாளங்களை (Altered his appearance) முழுமையாக மாற்றியமைத்திருந்த போதிலும், தொழில்நுட்ப உதவியுடன் அவர் பதுங்கியிருந்த இடம் துல்லியமாகக் கண்டறியப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











