வரி செலுத்தாதோர் , சிறை செல்ல வேண்டி வரும் என்ற பயத்தினால் வரிகளை செலுத்துவதனால் ,நாட்டின் அபிவிருத்தியை எம்மால் முன்னெடுத்து செல்ல கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமாக எங்களுடைய நோக்கம், பொதுமக்களின் பணத்தை வீணடிக்காமல், அவர்களுக்குப் பயன் தரும் திட்டங்களுக்கு அதனைச் சரியாகச் செலவிட வேண்டும் என்பதாகும். அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டாலும் , மக்களுக்குத் தேவையான அந்த வேலைகளை உரிய நேரத்தில், அதே வேகத்துடன் செய்து முடிப்பதில் சில இடங்களில் எங்களால் இயலாமல் போகிறது. அதற்குக் சில தடைகளும் காணப்படுகின்றன. அது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.
கடந்த காலங்களில் வரி செலுத்தாதோர், இம்முறை பாரிய அளவில் தங்களது வரியினை செலுத்தி கொள்கின்றனர். ஏனென்றால் வரி செலுத்தாதவர்கள் சிறைச்சாலை செல்ல வேண்டி ஏற்படும் என்ற பயத்தினால், வரியினை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வரி செலுத்தாதோர் சிறை செல்ல வேண்டும் என்ற பயத்தினால் அவர்கள் வரியினை செலுத்துவதன் ஊடாக அபிவிருத்தியை செய்ய முடிகிறது.
அதுமட்டுமல்லாமல், பெரிய அளவில் ஊழல்கள் மற்றும் நிதி மோசடிகள் செய்தவர்களை, நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, போலீஸ், நீதிமன்றம் ஆகியவை ஊழல் செய்தவர்களை எந்த தராதமும் பார்க்காமல் தண்டனைக்கு உட்படுத்தும் முயற்சியில் முன்னின்று செயல்படுவதனால், பல ஊழல்கள் இன்று குறைந்துள்ளன என தெரிவித்தார்.











