தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்கும் ’சதித் திட்டம் தொடர்பான வழக்கில் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை (ED) தற்போது உத்தியோகபூர்வமாக விசாரணையில் களமிறங்கியுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து பெறப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் அனைத்தும் சென்னை காவல்துறையினரால் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்ட இந்த உத்தேச ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தின் பின்னணியில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறையிலான பாரிய நிதிப் புழக்கம் இருந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை போலீஸ் ஆணையாளர் அமல்ராஜுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் உத்தியோகபூர்வமாக எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பான அத்தனை முக்கிய ஆவணங்களும் அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் இந்தியப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை மிகத் துரிதமாக ஆரம்பித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய புள்ளிகளின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை (Call Data Records) சைபர் க்ரைம் போலீசார் மிகத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில், இந்தச் சதித் திட்டத்துடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் மேலும் நான்கு சந்தேக நபர்களைச் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இவர்களில் மதுரையைச் சேர்ந்த கணேசன் மற்றும் ரகு ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ரகசிய இடத்தில் வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்விவகாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் பின்னணியில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் செயல்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத சுமார் 60 லட்சம் இந்திய ரூபாய் ரொக்கப் பணத்தை உளவுத்துறையினரும் போலீசாரும் பறிமுதல் செய்திருந்தனர்.
இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்பட்டமையால், இதன் பின்னணியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வலையமைப்பு சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே, இந்திய மத்திய அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் பிரதான காரணமாக அமைந்துள்ளது.











