உலக எரிசக்தி வர்த்தகத்தின் மூலோபாய மையமான ஹொர்முஸ் நீரிணையை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஈரான், தற்போது தனது அடுத்த ஆபத்தான மூலோபாய நகர்வை ஆரம்பித்துள்ளது.
யேமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் எல்-மந்தேப் (Bab el -Mandeb) நீரிணையை முற்றாக மூடுவதற்கு, ஈரான் சமிக்ஞை காட்டியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிராகப் புதியதொரு முனையைத் திறந்து, உலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தின் இரு முக்கிய புள்ளிகளையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாக்க, ஈரான் முயல்வதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, ஈரானின் அனைத்துத் துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா இன்று முதல் புதிய கடல்சார் முற்றுகையை (Maritime blockade) அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் பெரும்பகுதி கடந்து செல்லும் பாப் எல்-மந்தேப் நீரிணையை மூடுவதற்குத் தங்களது ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர் தரப்பு உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது.











