2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை கடுமையான பலப்பிரயோகத்தினை மேற்கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய 54 வயது பாதுகாவலரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் குற்றவாளியாக இனம் கண்டு தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த சந்தேகநபருக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு அந்த சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்ற பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
இந்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். இதை தொடர்ந்து சந்தேகநபர் இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்த ஸ்ரீ அவர்களினால் நெறிப்படுத்தபட்டிருந்தது.
குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள்,
வழக்கு தொடுநர் தரப்பு குறித்த சந்தேகநபருக்கு எதிரான குற்றசாட்டினை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் சந்தேகநபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.
குறித்த குற்ற செயலின் போது சந்தேகநபரால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை, சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் சந்தேகநபருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.











