மொன்றியல் நகரில் ஆங்கில மொழிச் சிறுவர் பாதுகாப்புச் சேவைகளை வழங்கிவரும் ‘பட்ஷா சிறுவர் மற்றும் குடும்ப நிலையத்தின்’ (Batshaw Youth and Family Centres) பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் இருந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொன்றியல் நகரில் இயங்கும் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சிறுவர் பாதுகாப்புத் துறையில் நிலவும் தீவிரப் பணியாளர் பற்றாக்குறை மற்றும் அலட்சியப் போக்கிற்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் கியூபெக் சொலிடேர் (Québec Solidaire) அரசியல் கட்சியும் ஊழியர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
உயிரிழந்த மூன்று சிறுவர்களில் இருவர், தங்களது வீடுகளுக்குச் சமூகப் பணியாளர்கள் வருகை தந்து தங்களைக் கண்காணிப்பதற்கான
அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்திற்காகக் காத்திருந்த வேளையிலேயே உயிரிழந்துள்ளனர். மூன்றாவது சிறுவன், பிரீவோஸ்ட் (Prévost) பகுதியில் ‘பட்ஷா’ நிறுவனத்தால் நேரடியாக நிர்வாகிக்கப்பட்டு வந்த சிறுவர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்தபோது, தவறான முடிவை மேற்கொண்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளான்.
ஒரே மாதத்தில் இடம்பெற்ற இந்த மூன்று மரணங்களும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள கியூபெக் சொலிடேர் கட்சி மற்றும் சிறுவர் பாதுகாப்பு ஊழியர் சங்கங்கள், “யாரும்
இந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளன.
சிறுவர் பாதுகாப்புப் பிரிவில் நிலவும் காலதாமதங்கள், ஊழியர்களுக்கான பணிச்சுமை மற்றும் போதுமான கண்காணிப்பின்மை ஆகியவையே இத்தகைய துயரச் சம்பவங்களுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியினர், இது குறித்துச் சுதந்திரமான மரண விசாரணை (Coroner Inquest) மற்றும் முறைசார் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் பதிலளித்துள்ள 'பட்ஷா' மையத்தை நிர்வகிக்கும் ‘CIUSSS de l’Ouest-de-l’Île-de-Montréal’ சுகாதார அமைப்பு, தனிப்பட்ட நபர்களின் ரகசியத்தன்மை மற்றும் குடும்பங்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட வழக்குகள் குறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.










