பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவத் தலைமையகத்தில் பயிற்சிப் பணியாளராக பணியாற்றிய கனடியப் பெண் ஒருவர், உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெல்ஜிய கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குறித்த பெண் ஒரு மூன்றாம் நாட்டிற்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், மேலும் ஒரு குற்றவியல் அமைப்பின் உறுப்பினராக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெல்ஜிய பாதுகாப்பு மற்றும் விசாரணை அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும், அவர் எந்த நாட்டிற்காக உளவு பார்த்தார் அல்லது எந்த வகையான தகவல்களை பகிர்ந்தார் என்பது தொடர்பான விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
நேட்டோவின் முக்கிய இராணுவத் தலைமையகத்தைச் சுற்றியுள்ள இந்த உளவு விவகாரம், சர்வதேச பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











