கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் வகையில் பில்லியன் கணக்கில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்’ (Gordie Howe International Bridge) திறப்பு விழாவை முன்னிட்டு, விண்ட்சர் நகரில் விசேட ரிப்பன் வெட்டும் நிகழ்வும் கொண்டாட்டங்களும்
இடம்பெற்றுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தக வரிகள் (Tariffs) தொடர்பான அண்மைய அரசியல் பதற்றங்கள் காரணமாக, அமெரிக்க அதிகாரிகளின் பங்கேற்பின்றி கனடியப் பிரதிநிதிகள் மாத்திரம் இதில் கலந்துகொண்டு விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் இப்பாலம் வாகனப் போக்குவரத்திற்காகப் அதிகாரப்பூர்வமாகத் திறந்து
வைக்கப்படவுள்ளது. சுமார் 6.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் மூலமாகத் தாங்கப்படும் (Cable-stayed bridge) இப் பால திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட சுங்கக் கட்டண (Toll revenue) ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாகச் சுங்கக் கட்டணங்கள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் காரணமாகப் பாலத் திறப்பு பல மாதங்களாகத்
தாமதமாகி வந்த நிலையில், இந்த உடன்படிக்கையின் மூலமே பாலத்தை இயக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. கனடிய தரப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford), விண்ட்சர் நகர மேயர் டிரூ டில்கென்ஸ் (Drew Dilkens), அமெரிக்காவுக்கான கனடிய தூதர் மார்க் வைஸ்மேன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய தலைவர்கள், புதிய பாலம் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும்
என்றும், பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் மிகப்பெரிய தூணாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டனர். எதிர்வரும் 27 இல் வர்த்தக மற்றும் பயணிகள் வாகனப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுநர்களுக்கான விசேட பாதை (Multi-use path) திறக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி இந்த வழியைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தின் விண்ட்சர் நகரையும், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரையும் இணைக்கும் வகையில் டெட்ராய்ட்
நதியின் குறுக்கே இப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க கண்டத்திலேயே மிக முக்கியமான மற்றும் பரபரப்பான வர்த்தக எல்லைக் கடப்பாக இது கருதப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் பரவிய கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் மற்றும் கட்டுமானத் தாமதங்கள் காரணமாக திட்டமிடப்பட்ட காலக்கெடுவை விடத் தாமதமான
இப் பாலம், தற்போது அனைத்துச் சோதனைகளும் நிறைவடைந்து பயன்பாட்டிற்குத் தயாராகியுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள அம்பாசிடர் பாலத்தின் (Ambassador Bridge) போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, இரு நாடுகளுக்கு இடையிலான விநியோகச் சங்கிலியை (Supply Chain) இப் பாலம் வெகுவாக விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.











