பட்ஷோ சிறுவர் மற்றும் குடும்ப சேவை மையத்தின்’ (Batshaw Youth and Family Centres) பராமரிப்பு மற்றும் கண்காணிப்பில் இருந்த மூன்று சிறுவர்களின் உயிரிழப்பு தொடர்பில், கியூபெக்கின் தேசிய சிறுவர் பாதுகாப்பு பணிப்பாளர் (Lesley Hill) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மரண விசாரணை அதிகாரியின் விசாரணைக்கு இணையாக, இச்சம்பவங்கள் குறித்து அமைச்சு மட்டத்திலும் அவசர ஆய்வுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, அவர் தமது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் சில வார இடைவெளியில் நிகழ்ந்த இந்த சோகமான சம்பவங்கள் தொடர்பாக, கியூபெக் மரண விசாரணை அதிகாரி (Coroner) தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
மொன்றியலில் ஆங்கில மொழியில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவைகளை வழங்கும் முதன்மை அமைப்பாக பட்ஷோ மையம் விளங்குகின்றது.
இந்த மையத்தின் கண்காணிப்பு அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருந்த 16 வயதுச் சிறுமி, 17 வயதுச் சிறுவன் மற்றும் 4 வயதுச் சிறுமி ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பாத பட்ஷோ மையத்தின் ஊழியர்கள் சிலர், இந்தச் சம்பவங்கள் குறித்துப் பேசுகையில், ” சிறுவர் பாதுகாப்பு அமைப்பில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை, போதிய நிதியின்மை மற்றும் ஊழியர்கள் விலகுதல் ஆகிய காரணங்களால், பாதுகாக்கப்பட வேண்டிய குழந்தைகள் உரிய நேரத்தில் பின்தொடரப்படாமல் கைவிடப்படுவதாகத்” தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தற்போதைக்கு மூன்று சிறுவர்களின் உயிரிழப்புகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ள போதிலும், முறையான கண்காணிப்பின்மையால் மேலும் சில சம்பவங்களும் இடம்பெற்றிருக்கலாம் என ஊழியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.











