தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், நுகர்வோர் அளிக்கும் புகார்களின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், ரசீது இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறையும் அமுலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும், 2022-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை சட்டவிரோதமாகக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைச் சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராகப் பணிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபானங்களுக்கு ரசீது வழங்கக் கோரி அனைத்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் நடைமுறைச் சிரமங்கள் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, “ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட்டில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது தரும் நிலையில், மாநில அரசுக்குப் பெருமளவில் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏன் காவலர்களைப் பணியமர்த்தக் கூடாது?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி, அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைப் பின்பற்றாமல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நுகர்வோர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும், பெறப்படும் புகார்கள் மீது தாமதமின்றி உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் அளித்த புகார் மீது முறையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.











