ஒட்டாவா – அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு கனடா பணிந்து விடக்கூடாது என கனடா கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவியர் பிரதமர் மார்க் கார்னியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் கார்னிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்காவின் பல கோரிக்கைகளுக்கு ஒட்டாவா இணங்கியுள்ளதாக பொலிவியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, டிஜிட்டல் சேவை வரியை நீக்கியதும், அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்ட பதில் வரிகளை அகற்றியதும் இதில் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடியர்களுக்கு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட அரசாங்கம் தேவை எனக் கூறியுள்ள பொலிவியர், வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக கனடாவின் உள்நாட்டு பொருளாதார வலிமையை அதிகரித்து பேச்சுவார்த்தையில் சாதகமான நிலையை உருவாக்க பிரதமர் கார்னி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீதம் வரை புதிய அமெரிக்க வரிகள் விதிக்கப்படவுள்ளன. இந்த வரிகள் சுமார் 10 நாட்களில் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பால் உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு பாதுகாப்பு வழங்கும் Supply Management முறை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
கனடிய பால் உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இந்த முறையில் எந்தவொரு சலுகையும் வழங்க வேண்டாம் என Dairy Farmers of Canada அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை கனடா பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள போதிலும், ஒவ்வொரு முறையும் அமெரிக்க தரப்பிலிருந்து புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், கனடாவின் Supply Management முறைக்கு தனது அரசாங்கம் தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.











