அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இதன் காரணமாக ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அமெரிக்காவின் கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஈரான் தெளிவுபடுத்தியது. மேலும், ஓமனுடனான இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு எந்தவொரு பங்களிப்பும் இல்லை என்றும் ஈரான் உறுதியாகக் கூறியுள்ளது.
லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை தங்களால் கடுமையாகத் தாக்க முடியும் என்றாலும், அப்பாவி மக்களைக் கொல்வது தனது நோக்கம் அல்ல என்பதால் ஒரு ஒப்பந்தத்தை எட்டவே விரும்புவதாகக் கூறினார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பாரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருந்தபோது, ஈரான் தரப்பில் தாக்குதலைத் தவிர்க்குமாறும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன், ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபரின் இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் அணு ஆயுதங்களைக் கைவிடும் வரை, நாட்டின் பாதுகாப்பிற்காக ஈரான் தொடர்ந்து அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை மேற்கொளும் என்று எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே ஈரானும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமன் நாட்டின் கடல் எல்லைக்கு அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் ஒன்றின் அருகே இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அந்தச் சம்பவத்தில் கப்பலும் அதில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.











