தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சர்வதேசத் தரத்தில் பிரம்மாண்ட ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ‘வாரணாசி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் முற்றிலும் மாறுபட்ட முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் மகேஷ் பாபு, ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் புகைப்படத்தில், ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பின்னணியில் ஒட்டகச்சிவிங்கிகள் நிற்க, மகேஷ் பாபு மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். காடுகளுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ஆராய்ச்சியாளராக அவர் இப்படத்தில் வலம் வரவுள்ளதை இந்தத் தோற்றம் உறுதி செய்கிறது.
‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய உலகப்புகழ் பெற்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் சார்பில் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், முழுமையாக ஐமாக்ஸ் 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.











