வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்குப் பயணத்தைத் தொடங்கிய படகு ஒன்று நடுக்கடலில் பழுதானதால், 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றித் தத்தளித்து 17 அகதிகள் உயிரிழந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்பெயினின் மல்லோர்கா தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின்படி, தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு தென்மேற்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகையும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள் ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்த நிலையில், எல்லை கடக்கும் முயற்சியில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.











