இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவிலிருந்து அண்டை தீவான லோம்போக் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புத்ரி யாஸ்மின்’ என்ற பயணிகள் படகில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 4:15 மணியளவில் நடுக்கடலில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது, 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர், 44 வாகனங்கள் மற்றும் 53 மோட்டார் சைக்கிள்கள் படகில் இருந்தன. தீயின் தாக்கம் தாங்க முடியாமல், லைஃப் ஜாக்கெட் அணிந்த பயணிகள் பலர் கடலில் குதித்துத் தப்ப முயன்றனர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், 13 அடி உயரத்திற்கு எழுந்த சீற்றமான அலைகளையும் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் மற்றும் 6 கப்பல்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 211 பேரைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசியப் பெண் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 5 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படகின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் 131 பேர் மட்டுமே இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 211 பேர் மீட்கப்பட்டது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. விதிகளுக்குப் புறம்பாகக் கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்ற குளறுபடி குறித்து இந்தோனேசிய அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.











